brand logo
பூனையால் ஏற்பட்ட குடும்ப தகராறில் பெண் ஒருவர் உயிரிழப்பு

பூனையால் ஏற்பட்ட குடும்ப தகராறில் பெண் ஒருவர் உயிரிழப்பு

17 April 2024 | k.yoshiya

வீட்டு செல்லப்பிராணியான பூனையால் மைத்துனர்கள் இருவருக்கிடையில் நடந்த தகராறில் பெண் ஒருவர் அதிர்ச்சிக்குள்ளாகி வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,


தென் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தின் மாவட்ட நீதிபதி ஒருவர் புத்தாண்டுக்காக சப்-இன்ஸ்பெக்டரான மைத்துனரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.


குறித்த நீதிபதி சப்-இன்ஸ்பெக்டரின் சகோதரியை திருமணம் செய்துள்ளார்.


கடந்த 13ஆம் திகதி புத்தாண்டு தினத்தன்று மாவட்ட நீதிபதி தனது மனைவியுடன் வீட்டில் வளர்க்கும் பூனையுடன் மைத்துனரான சப்-இன்ஸ்பெக்டர் மைத்துனரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். 14ஆம் திகதி இரவு, நீதிபதியும், அவரது மனைவியும் தமது வீட்டுக்கு செல்ல முற்படும் போது, அவர்கள் கொண்டு வந்த பூனை வீட்டில் இருக்கவில்லை.


இது தொடர்பாக மைத்துனர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அச்சந்தர்ப்பத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தகாத வார்த்தைகளில் மைத்துனரான நீதிபதியை திட்டி கண்ணத்தில் அரைந்ததாகவும் நீதிபதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அக்மீமன பொலிஸ் பரிசோதகர் உட்பட அதிகாரிகள் குழு வீட்டிற்கு வந்து சம்பவம் தொடர்பாக நீதிபதியிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டிருந்த போது நீதிபதியின் மனைவி அதிர்ச்சியில் கிழே விழுந்த நிலையில் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்துள்ளார்.


நீதிபதியை தகாத வார்த்தைகளில் திட்டி கண்ணத்தில் அரைந்ததாக கூறப்படும் சப் இன்ஸ்பெக்டரை சந்தேகத்தின் பேரில் அக்மீமன பொலிஸார் கைது செய்து காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த சம்பவத்திற்கு காரணமான பூனை நீதிபதியின் காரில் இருந்தமை பின்னர் தெரியவந்துள்ளது.



You may also like