brand logo
ஆப்கானில் பெண்களை கல்லால்  அடித்துக் கொல்லும் தண்டனை மீண்டும் அமுல்

ஆப்கானில் பெண்களை கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை மீண்டும் அமுல்

29 March 2024 | Mahendran Dinush khan

ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்துவரும் தலிபான்கள், இனி தங்கள் நாட்டில் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்களுக்கு கசையடி கொடுத்தல், கல் எறிந்து கொல்லுதல் போன்ற தண்டனைகள் நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளனர்.


கடந்த 2021ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அறிவித்தனர். அதேவேளையில், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது. பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்திருப்பினும் தற்போது வறுமையும், பசியும், நோயும் மட்டுமே மிஞ்சியுள்ளது.


ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் கிளம்பியதனால், அங்கு ஆட்சியை தலிபான்கள் எளிதில் கைப்பற்றினர் . ஆனால் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தான் என்று பெயரை மட்டுமே அவர்களால் மாற்ற முடிந்ததே தவிர ஆட்சி மாற்றத்தினால் ஆக்கபூர்வமாக நாட்டிற்கு எதுவும் செய்ய முடியவில்லை என்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.


இந்நிலையில், அரசு தொலைக்காட்சியில் தலிபான் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்ஸதா வெளியிட்ட அறிவிப்பில், பெண்களுக்கு பொது இடத்தில் வைத்து கசையடி, கல்லடி வழங்கும் நடைமுறை மீண்டும் அமுலுக்கு வரும் எனக் கூறியுள்ளார்.அதில் அவர் ‘சர்வதேச சமூகம் ஆப்கன் பெண்களின் உரிமைகள் பற்றி பேசி வருகின்றன. அது ஷாரியத் சட்டத்துக்கு எதிரானது.


பெண்களைக் கல்லால் அடித்துக் கொன்றால் அது பெண் உரிமைக்கு எதிரானது என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், விரைவில் நாங்கள் அதை நடைமுறைப்படுத்தப் போகிறோம். திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்களை நாங்கள் கல்லால் அடித்தும், கசையடி கொடுத்தும் கொல்லும் நடைமுறையைக் கொண்டு வரப் போகிறோம்.பொதுமக்கள் முன்னிலையில் இந்தத் தண்டனை நிறைவேற்றப்படும். காபூலைக் கைப்பற்றியதோடு தலிபான்களின் வேலை முடிந்துவிடவில்லை. இப்போதுதான் அது தொடங்கியுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.


You may also like