brand logo
3ஆவது நாளாகத் தொடரும் நுவரெலியா ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்

3ஆவது நாளாகத் தொடரும் நுவரெலியா ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்

29 March 2024

 

 

நுவரெலியா ஆவா எளிய பகுதியில் இயங்கும் பிரபல ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் இன்று காலை வீதிக்கிறங்கி கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

 

ஊழியர்களுக்கு வருடாந்தம் வழங்கப்படும் (போணஸ்) முன்பணத்தை வழங்கும்படி  கோரிக்கையை முன்வைத்து இந்த கவனஈர்ப்பு போராட்டம் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுத்து வருவதாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

 

உலகலாவிய ரீதியில் ஆடைகள் தைத்து ஏற்றுமதி செய்யப்படும் நுவரெலியா "இண்டர்பெஷன்" ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களே இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

 

நுவரெலியா "இண்டர்பெஷன்" ஆடை தொழிற்சாலை நுவரெலியாவில் பழைமை வாய்ந்த தொழிற்சாலையாகும். இந்த தொழிற்சாலையில் 900 க்கு அதிகமான இளைஞர் யுவதிகள் பணியாற்றி வருகின்றனர்.

 

இந்த தொழிற்சாலையில் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் விலை உயர்ந்த பல்வேறு ஆடைகள் தைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

 

அதேநரத்தில் இங்கு தொழில் செய்து வரும் தொழிலாளர்களுக்கு வருடம் ஒருமுறை பண்டிகை காலத்தை இலக்கு வைத்து வருடாந்த முன்பணம் வழங்குவது வழமையாகும்.

 

இருந்த போதிலும் கடந்த கொரோனா பேரிடர் தொற்று ஏற்பட்டிருந்த காலப்பகுதியில் அவ்விடத்திற்கு வழங்கப்பட வேண்டிய வருடாந்த முன்பணம் வழங்கப்படவில்லை என ஊழியர்கள் தெரிவித்தனர்.

 

இந்த நிலையில் கடந்த 2023 ஆம் வருடம் வழங்கப்பட வேண்டிய வருடாந்த முற்பணம் வழங்கப்படவில்லை.இந்த நிலையில் ஊழியர்கள் ஆடை தொழிற்சாலை நிர்வாகத்துக்கு எதிராக போராட உள்ளதாக தெரிவித்து எச்சரித்துள்ளதுடன் 2023 இதே காலப்பகுதியில் ஒருமணிநேர போராட்டத்திலும் ஈடுப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

 

இதன்போது முன்வந்த தொழிற்சாலை நிர்வாகம் தற்போது தொழிற்சாலை நட்டத்தில் இயககுவதாக தெரிவித்து 2024 ஆண்டு மார்ச் மாதத்தில் ஊழியர்களுக்கான வருடாந்த முற்பணம் கட்டாயமாக வழங்கப்படும் என உறுதி வழங்கியுள்ளது.

 

அதேநேரத்தில் தொழிற்சாலை இலாபத்தில் இயங்க வேண்டும் என்பதால் ஊழியர்கள் தேவையற்ற விதத்தில் விடுமுறைகள் பெற கூடாது, அத்துடன் நாள் ஒன்றில் மேலதிக நேரத்திற்கும் பணியாற்ற வேண்டும் என கட்டுப்பாடும் விதித்தது இதற்கு இனங்கினால் 2024 மார்ச் மாதத்தில் வழமையாக வழங்கப்படும் வருடாந்த முன்பணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

 

இதற்கு இயங்கிய ஊழியர்கள் கட்டுப்பாடுகளுக்கு ஏற்று தமது முழுமையான உழைப்பை தொழிற்சாலைக்கு வழங்கியதாகவும் தெரிவித்தனர்.

 

இந்த நிலையில் தற்போது 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த முன்பணத்தை இம்முறை வழங்க முடியாது மீண்டும் தொழிற்சாலை நட்டத்தில் இயங்குகிறது என்ற பழைய பல்லவியை தொழிற்சாலை நிர்வாகம் பாடியுள்ளது.

 

இதை எதிர்த்துள்ள ஊழியர்கள் கடந்த செவ்வாய் கிழமை (26) மாலை முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதை தொடர்ந்து தொழிற்சாலை நிர்வாகம் ஊழியர்களுடன் பேச்சு நடத்தி இம்முறை 50% வருடாந்த முன்பணத்தை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

 

இருப்பினும் தமக்கு 100% முன்பணம் வழங்கப்பட வேண்டும் இதற்காகவே கடந்த இரு வருடங்களாக தமது முழு உழைப்பினை வழங்கியதாக ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

இந்த நிலையில் தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கையை புறக்கனித்ததன் காரணமாக தொடர்ச்சியாக பணி நிறுத்தத்தை முன்னெடுத்த ஊழியர்கள் தமது கோரிக்கைக்கு நீதி வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து தொழிற்சாலை வலாகத்தில் கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பதாக தெரிவித்தனர்.

 

இது இவ்வாறிருக்க இன்று (29) தொழிற்சாலை நிர்வாகம் ஊழியர்களை தொழிலுக்கு வரும்படி அழைப்பு விடுத்துவிட்டு தொழிற்சாலை பணிகளை முடக்கிவிட்டு தொழிற்சாலையை இழுத்து மூடியுள்ளது.

 

இந்த நிலையில் ஊழியர்கள் தொழிற்சாலைக்கு வெளியில் தமது போராட்டத்தை முன்னெடுப்பதுடன் தமக்கு நேர்ந்ததையும், தமது கோரிக்கையையும் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் ஊழியர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன் நுவரெலியா தொழில் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

 

ஆ.ரமேஸ்.



You may also like