வவுனியாவில் உழவு இயந்திரத்தின் கலப்பையில் அகப்பட்டு 5 வயது சிறுவன் உயிரிழப்பு
வவுனியா, பாலமோட்டைப் பகுதியில் உழவு இயந்திரத்தின் கலப்பையில் அகப்பட்டு 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
இன்று (21) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பாலமோட்டைப் பகுதியில் உள்ள தமது காணியை உழவு இயந்திரத்தின் மூலம் உழுத போது இரு பிள்ளைகளையும் உழவு இயந்திரத்தின் இரு மருங்கிலும் இருத்தி விட்டு உழுதுள்ளனர்.
இதன்போது உழவு இயந்திரத்தின் ஒரு பக்கத்தில் அமர்ந்திருந்த சிறுவன், உழவு இயந்திரம் உழுத போது தவறி கீழே வீழ்ந்து உழுது கொண்டிருந்த கலப்பைக்குள் அகப்பட்டு வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளான்.
சிறுவனை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போதும் வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்னரே சிறுவன் இறந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா, பலமோட்டையைச் சேர்ந்த க.கனிசன் (வயது 5) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வைத்தியசாலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.