புகையிரதத்தில் மோதி நபரொருவர் பலி
மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் நபரொருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (04) இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மூன்றாம் குறுக்கு, திராய்மடு பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான சேனாதிபதி அசோக்குமார் என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று இரவு 8.45 மணிக்கு சென்ற புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் ஊடாக தெரியவந்துள்ளது.
குறித்த சடலத்தை நேரில் சென்று பார்வையிட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.