பாடசாலை வேனிலிருந்து தவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு
வெல்லவாய – எல்ல வீதியில் ஹுணுகெட்டிய சந்தியில் இன்று (25) மதியம் ஏற்பட்ட வாகன விபத்தில் முன்பள்ளி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பரகஹராவ பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவனொருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் கடும் காயங்களுக்கு உள்ளான சிறுவன் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்துள்ளார்.
முன்பள்ளி நிறைவடைந்து பின்னர் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் ஒன்றில், வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளையில், திடீரென அதன் கதவு திறந்து மாணவன் வெளியே விழுந்துள்ளதாக விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
மேற்படி சம்பவத்தின் பின்னர் குறித்த சிற்றூர்தியை செலுத்திய சாரதி வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு சந்தேக நபர் நாளை (26) வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.