சீரற்ற வானிலை காரணமாக 25 பேர் உயிரிழப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் கடந்த ஒக்டோபர் 29 ஆம் திகதி முதல் இன்று மாலை 5.30 வரை, 25 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்தங்களால் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமற்போயுள்ளார்.
அத்துடன், 17 மாவட்டங்களுக்கு உட்பட்ட 145 பிரதேச செயலகங்களில் உள்ள 60, 264 குடும்பங்களைச் சேர்ந்த 212, 060 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி பிரதேசங்களில் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட அனர்த்தங்கள் காரணமாக தமது வசிப்பிடங்களில் 3648 குடும்பங்கள் வெளியேறியுள்ளனர்.
இவ்வாறு வெளியேறிய குடும்பங்களைச் சேர்ந்த 12, 476 பேர், 76 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், குடியிருப்புகளிலிருந்து இடம்பெயர்ந்த 10,023 குடும்பங்களைச் சேர்ந்த 37, 690 பேர் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
இதேவேளை, குறித்த அனர்த்தங்களால் 1,229 வீடுகள் பகுதியளவிலும், 23 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.