கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு
கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
பொரளை, ஹங்வெல்ல, பன்னலை மற்றும் சப்புகஸ்கந்த ஆகிய பகுதிகளில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரளை பகுதியில் நேற்று (28) மாலை இடம்பெற்ற விபத்தில் 42 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இதனிடையே, ஹங்வெல்ல அட்டிகல மீகொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததுடன் எதிரே வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பதுளையைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, பன்னலை – குளியாப்பிட்டி வீதியின் யக்பில பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார்சைக்கிளொன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
யக்பில பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே விபத்தில் பலியாகியுள்ளார்.
இதேவேளை, சப்புகஸ்கந்த பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முந்திச்செல்ல முற்பட்ட மோட்டார்சைக்கிள் ஒன்று கொள்கலனொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கடவத்தையைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.