இயற்கையின் கோரத்தாண்டவம் – சாமிமலையில் நிர்க்கதியான 102 பேர்
-அட்டன் ராம்-
வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மஸ்கெலியா ,சாமிமலை ஓல்ட்டன் கீழ்ப்பிரிவு தோட்டத்தை சேர்ந்த 30 குடும்பங்களை சேர்ந்த 102 பேர் உடமைக்களை இழந்து நிர்க்கதி நிலைக்குள்ளாகியுள்ளனர்.
மலையகத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்த கடும் மழையினால் வெள்ளம் பெருக்கெடுத்ததுடன் வீதிபோக்குவரத்துகள் மண்சரிவினால் பாதிப்படைந்ததுடன் குடியிப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்தமையினால் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது
அந்த வகையில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட சாமிமலை ஓல்டன் கீழ் பிரிவு தோட்ட
பகுதியில் நேற்று பெய்த அடை மழையில் சாமிமலை கல்தோனி ஓயா பெருக்கெடுத்தமையினால் ஆற்றடி பிள்ளையார் ஆலயம் உட்பட சூழவுள்ள 30 குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.இதனால் 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளப்பெருக்கெடுப்பினால் தமது உடமைகளை, அடையாள அட்டை, பிறப்புசான்றிதழ் ,அத்தியாவசிய
பொருட்கள், தளபாடங்கள் கால்நடைகள் ஆகியன நீரில் அடித்துசெல்லப்பட்டுள்ளதாகவும் மாற்று உடைகள் கூட இல்லாது தவிப்பதாகவும் பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.
மேலும் பாடசாலை மாணவர்களின் சீருடைகள், பாதணிகள் என்பன வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதோடு இன்றைய தினம் பாதிக்கப்பட்ட மக்கள் தத்தமது குடியிருப்புகளுக்குள் தேங்கி நிற்கும் கழிவுகளையும் சேறுகளையும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதியில் கிருமிநாசினி தெளிக்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வரும் அதே வேலையில் அப்பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்குண்ட சிறுவன் ஒருவன் மஸ்கெலியா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனர்த்தத்தினால் பாதிப்படைந்து நிர்க்கதியான 30 குடும்பங்கள் தமது வழமையான வாழ்க்கைக்கு மீண்டு வர உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படுகிறது