தேவைப்பட்டால் பாடசாலைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு – வட மாகாண ஆளுநர் சுரேன்
வடமாகாண பாடசாலைகளுக்கு இராணுவமயப்படுத்தப்படாத பொதுவான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திட்டமிட்டவாறு எதிர்வரும் 6ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும். பாடசாலைகளின் பாதுகாப்புத் தொடர்பில் சமூகமட்டக் குழுக்கள் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்புத் தேவை எனக் கோரினால் அதனை வழங்கத் தயார்”
இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
வடக்கு மாகாணத்தில் 339 தனியார் கல்வி நிலையங்கள் காணப்படுகின்றன. அவற்றின் ஒவ்வொரு பாடசாலைகளிலும் 1000 பேர் படிக்கின்றனர். இதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நகரபகுதியில் உள்ள 84 தனியார் கல்வி நிலையங்கள் உள்ளன. ஏனைய பகுதியில் 290 தனியார் கல்வி நிலையங்கள் இருக்கின்றன.
இதில் எந்தொரு கல்வி நிலையத்தின் இயக்குனரும் பதிவு செய்ய முன்வரவில்லை அவர்கள் முன்வரவேண்டும். அப்போது தான் அவ்வாறான கல்வி நிலையங்களுக்குப் பாதுகாப்பினை வழங்கமுடியும். பொலிஸார், அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் ஊடாக கல்வி நிலையத்திற்காக பாதுகாப்பினை கொடுக்கமுடியும். அதுவும் காலத்தின் தேவையாக இருக்கின்றது.
என்றார் ஆளுநர்
—